வாசித்து காட்டுங்க; பரிசு வெல்லுங்க; நகர மறுக்கிறது கல்வித்துறை திட்டம்
வாசித்து காட்டுங்க; பரிசு வெல்லுங்க; நகர மறுக்கிறது கல்வித்துறை திட்டம்
UPDATED : ஜன 08, 2016 12:00 AM
ADDED : ஜன 08, 2016 11:40 AM
உடுமலை
: அரசு
பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை அளவிட்டு, பரிசு வழங்கும் திட்டத்தில், ஆய்வுப் பணிகள்
தாமதமடைந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கற்றல், வாசித்தல் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்த, காலை மற்றும் மாலையில், இரண்டு மணி நேரம் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்த, கல்வித்துறை கடந்தாண்டு உத்தரவிட்டது.
அரைகுறை வாசிப்பு திறன் கொண்ட மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு வரை &'ஆல்பாஸ்&' முறையால் தப்பித்து, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாமல் திணறுகின்றனர். மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, சிறந்த வாசிப்பு திறனுள்ள மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, கடந்தாண்டு ஆகஸ்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் அறிவித்தது.
இத்திட்டத்தின்படி, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதலே மாணவர்களின் வாசிப்பு திறன் அளவிடப்படுகிறது. 4, 5 வகுப்புகள் ஒரு பிரிவாகவும், 6, 7, 8 ஒரு பிரிவாகவும் கணக்கிடப்படுகிறது. இதில் 6, 7, 8 வகுப்புகளுக்கான பிரிவில், 150 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அனைத்து மாணவர்களும், முழுமையாக வாசித்தல் திறன் பெற்றிருந்தால், அப்பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்க பரிசும், 3, 4, 5 வகுப்பு பரிவில் பரிசுத் தொகை, 20 ஆயிரம் ரூபாய் முதல், 50 ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த, சிறப்பு வகுப்புகளோடு, பயிற்சிகளையும் அளித்தனர். கடந்தாண்டு டிசம்பரில், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் வாயிலாக, மாணவர்களின் வாசித்தல் திறன் குறித்து ஆய்வு நடந்தது. டிசம்பர் முதலே கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வுகளை முழுமையாக நடத்தி, பணிகளை முடிக்கும்படி, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பள்ளி நிர்வாகிகளும், மாணவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
