போலி சான்றிதழ் பிரச்னை; சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்
போலி சான்றிதழ் பிரச்னை; சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்
UPDATED : ஜன 13, 2016 12:00 AM
ADDED : ஜன 13, 2016 11:56 AM
தர்மபுரி
: போலி
சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் சிக்கியதை அடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச்
சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
போலி சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பாரதியார் நகரைச் சேர்ந்த முனிப்பன், அவருக்கு உதவிய கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை, தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில், சிலர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 1990ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அடங்கிய, 5 குழுக்களை அமைத்து, தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டார். தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகத்தில் துவங்கியுள்ள இந்த பணி, வரும், 14ம் தேதி வரை நடக்கிறது. பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களின், எஸ்.எஸ்.எல்.சி., ஆசிரியர் பட்டயச் சான்று, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட அசல் கல்விச் சான்றிதழ்கள் குறித்து உண்மைத் தன்மை சரி பார்க்கப்படுகிறது.
பின்னர், சான்றிதழ்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வரும், 18ம் தேதி முதல், 22ம் தேதி வரை, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக, சி.இ.ஓ., மகேஸ்வரி தெரிவித்தார்.
