UPDATED : ஜன 20, 2016 12:00 AM
ADDED : ஜன 20, 2016 11:04 AM
தலைவாசல்
:
தலைவாசல் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தலைவாசல் அருகே, வட சென்னிமலை பகுதியில் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இதனால் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். பல முறை நிர்வாகத்துக்கு எடுத்து கூறியும் கண்டு கொள்ளவில்லை. கல்வி உதவித்தொகை வழங்குவதில் இழுபறி செய்யப்படுகிறது. ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
லேப்டாப் வழங்குவதில் இழுபறி என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இளங்கலை, முதுகலை, பட்டப்படிப்பு பயிலும் பலதரப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாததால், கல்லூரி நுழைவு வாயிலின் முன்புள்ள சாலையில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாதபடி கற்களை வைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைவாசல் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என, நிர்வாகத்தினர் உறுதியளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
