UPDATED : மார் 15, 2016 12:00 AM
ADDED : மார் 15, 2016 10:39 AM
மதுரை
: மதுரை
காமராஜ் பல்கலையில் நாளை (மார்ச் 16) நடக்க இருந்த
கல்விப் பேரவைக் கூட்டம் மார்ச் 28க்கு தள்ளிவைக்கப்பட்டது.
இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் ஓராண்டாக காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவில், உறுப்பினர் ராமசாமி ராஜினாமா செய்ததாலும், சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளதாலும் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆண்டுதோறும் மார்ச், நவம்பரில் நடக்க வேண்டிய கல்விப்பேரவைக் கூட்டம், துணைவேந்தர் கல்யாணி பதவி காலம் முடிந்த பின் ஒரு ஆண்டாக நடக்கவில்லை. கூட்டத்தை நடத்த வேண்டிய கன்வீனர் குழுவும் இதை கண்டுகொள்ளவில்லை. கல்விப்பேரவை கூட்டம் நடத்த தாமதம் ஏற்பட்டதால் அதை தொடர்ந்து நடக்கும் செனட், சிண்டிகேட் கூட்டங்களும் நடக்கவில்லை.
இதனால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரிகளில், பாடத் திட்டங்களில் மாற்றம் செய்வது உட்பட நடவடிக்கைகளில் முடிவு
எடுக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நாளை நடக்க இருந்த கல்விப்பேரவை கூட்டமும் மார்ச் 28க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், மார்ச் 23ல் சென்னையில் உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில் சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது. இதனால் அதற்கேற்ப கல்விப் பேரவைக் கூட்டம் மாற்றப்பட்டு உள்ளது. சில நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்காகதான் இந்த மாற்றம். இதில் தாமதம் ஏதும் இல்லை என்றார்.
