பொதுத்தேர்வில் முறைகேடு; ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிப்பு
பொதுத்தேர்வில் முறைகேடு; ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிப்பு
UPDATED : மார் 18, 2016 12:00 AM
ADDED : மார் 18, 2016 10:32 AM
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையம் ஒன்றில், பிளஸ் 2 வேதியியல் தேர்விலும்; 10ம் வகுப்பு தமிழ் தேர்விலும், சில மாணவ, மாணவியருக்கு மட்டும், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் விடைகளை கூறி உதவி செய்துள்ளனர். இதை, மாவட்ட கல்வி அலுவலகம் கண்டு கொள்ளாததால், தேர்வுத்துறைக்கு புகார் வந்தது.
தேர்வுத்துறை
இயக்குனர் :வசுந்தராதேவி உத்தரவின் படி, துணை இயக்குனர்
சசிரேகா விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்தார். மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்
சிலரின் பிள்ளைகளுக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் உதவும்
வகையில், இந்த ஏற்பாடு நடந்துள்ளது தெரிய
வந்தது.
இதையடுத்து,
ராமநாதபுரம் மாவட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்
அனைவரும், தேர்வு பணியில் இருந்து, நேற்று முன்தினம் திடீரென நீக்கப்பட்டனர்; அப்பணியில், அரசு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்வுக்கு
முந்தைய நாள் இரவில், திடீரென அரசு ஆசிரியர்களுக்கு தகவல்
அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்களுக்கு, அவர்களின்
வீட்டில் இருந்து, 50 கி.மீ., துாரம் வரை பணியிடம் ஒதுக்கீடு செய்ததால், சொந்த செலவில், வாடகைக்கு கார் எடுத்து பணிக்கு
சென்றனர்.
ராமநாதபுரம்
மாவட்டம் மட்டுமின்றி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், இந்த களையெடுப்பு நடந்துள்ளது. சென்னை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில், அதிக அளவில்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பணிகளில் பணியாற்றுகின்றனர்; ஆனால், அவர்கள் மாற்றப்படவில்லை.
இதுகுறித்து
பெற்றோர் கூறியதாவது:
புகார் வந்ததும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், தேர்வுத்துறையின் நடவடிக்கை உள்ளது. இதை முன்கூட்டியே செய்ய முடியாதது ஏன்; புகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்?இவ்வாறு அவர்கள் கூறினர்.
