குற்றம் செய்யாமல் ’சஸ்பெண்ட்’; பல்கலை மாணவி புகார்
குற்றம் செய்யாமல் ’சஸ்பெண்ட்’; பல்கலை மாணவி புகார்
UPDATED : மார் 19, 2016 12:00 AM
ADDED : மார் 19, 2016 10:50 AM
புதுடில்லி
: ஜவஹர்லால்
நேரு பல்கலைக்கழகம், எந்த குற்றச்சாட்டும் இன்றி, தன்னை, சஸ்பெண்ட் செய்ததாக, முதுகலை பட்டப் படிப்பு மாணவி புகார் கூறியுள்ளார்.
டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், கடந்த பிப்ரவரி, 9ல் மாணவர் நிகழ்ச்சி நடந்தது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் துாக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவை வாழ்த்தியும், தேசத்துக்கு விரோதமாகவும் மாணவர்கள் சிலர் கோஷமிட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த, ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை, பல்கலை துணைவேந்தர், கடந்த பிப்ரவரி, 11ல் நியமித்தார்.
மேலும், அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி, மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா, அசுதோஷ், ராமா நாகா, அனந்த் குமார், ஸ்வேதா ராய், ஐஸ்வர்யா அதிகாரி ஆகிய மாணவர்களை, வகுப்பில் பங்கேற்க தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
எனினும், விடுதியில் அவர்கள் தங்கியிருக்கலாம் என்றும், விசாரணை கமிட்டி அழைக்கும் போது, அதன் முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.இந்நிலையில், விசாரணை கமிட்டி, தன் அறிக்கையை, கடந்த 11ல், துணைவேந்தரிடம் சமர்ப்பித்தது. அதில், எட்டு மாணவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து, எட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த ஐஸ்வர்யா அதிகாரியின் பெயர், விசாரணை கமிட்டி அறிக்கையில், ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை என்பது, தெரிய வந்துள்ளது.
இது பற்றி
ஐஸ்வர்யா அதிகாரி கூறியதாவது:
முதுகலை பட்டப்படிப்பின் கடைசி செமஸ்டர் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். ஆனால், எந்த காரணமும் இன்றி, என்னை பல் கலைக்கழக நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து, என் படிப்பை சீரழித்துவிட்டது.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த மாணவர்கள் யாரும், விசாரணை கமிட்டி முன் ஆஜராகவில்லை. நேரில் பார்த்தவர்கள் அளித்த வாக்குமூலத்தை வைத்து, அறிக்கையை விசாரணை கமிட்டி தயாரித்து, துணைவேந்தரிடம் தாக்கல் செய்தது.
