UPDATED : மார் 19, 2016 12:00 AM
ADDED : மார் 19, 2016 11:11 AM
மதுரை
:
மதுரையில், பிளஸ் 2 தேர்வில், பார்த்து எழுதுவதற்கு விடைத்தாளை
கொடுக்காததால், மாணவர் ஒருவர், சக மாணவரால் தாக்கப்பட்டார்.
மதுரை, சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில் தேர்வு மையத்தில், நேரு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கணிதத் தேர்வு எழுதினர். ஓர் அறையில் முன் இருக்கையில் உள்ள மாணவரிடம், பின்னால் அமர்ந்த மாணவர் சந்தேகம் கேட்டு கேட்டு எழுதினார்.
இதை கவனித்த அறை கண்காணிப்பாளர், அவரை கண்டித்தார். சிறிது நேரத்தில், அந்த மாணவரின் விடைத்தாளை கேட்டு நச்சரித்தார். இதனால் தேர்வை தொடர்ந்து எழுத முடியாத அந்த மாணவர், அதிருப்தியாகி அறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
இதில் ஆத்திரமடைந்த, விடைத்தாள் கேட்ட மாணவர், முன்னால் இருந்த மாணவரை கண்காணிப்பாளர் முன்னிலையில் தாக்கினார். இதனால் அந்த அறையில் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து, முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர், சம்பவம் குறித்து விசாரித்தனர்.
மாவட்ட
பொறுப்பாளரான இணை இயக்குனர் சசிகலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கூறுகையில்,
நான், ராமநாதபுரத்தில்
கண்காணிப்பு பணியில் உள்ளேன்; சம்பவம் குறித்து எனக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன், என்றார்.
