மாணவி கண் பாதித்த விவகாரம்; ஆசிரியர்கள் மீது வழக்கு
மாணவி கண் பாதித்த விவகாரம்; ஆசிரியர்கள் மீது வழக்கு
UPDATED : மார் 22, 2016 12:00 AM
ADDED : மார் 22, 2016 10:44 AM
வேலூர்
:
குடியாத்தம் அருகே, பள்ளி மாணவியின் கண் பாதிக்கப்பட்ட
சம்பவத்தில், அஜாக்கிரதையாக இருந்த தலைமை ஆசிரியர்
மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நத்தத்தைச் சேர்ந்த பாலாஜி மகள் கோட்டீஸ்வரி, 11. இவர், இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 9ம் தேதி பள்ளியில் செயல் முறை விளக்கம் நடந்தது. அப்போது, கெமிக்கல் கலந்த கண்ணாடி குவளை கீழே விழுந்தது. அதிலிருந்து தெறித்த தண்ணீர் மாணவி கோட்டீஸ்வரியின் கண்ணில் பட்டதால், வலது கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டது.
இதனால் மாணவி, வேலூர் சி.எம்.சி., மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் தந்தை பாலாஜி, குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, வேதியியல் ஆசிரியர் பரசுராமனை சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை மார்க்ரெட், வகுப்பு ஆசிரியர் காயத்ரி ஆகியோர் மீது, அஜாக்கிரதையாக இருத்தல், கவனக்குறைவாக இருத்தல் ஆகிய பிரிவுகளில், போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
