UPDATED : மார் 22, 2016 12:00 AM
ADDED : மார் 22, 2016 10:54 AM
மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.
மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.
இதுகுறித்து, மாநில அரசுகளின் விருப்பத்தை கோரியது. அதில், 19 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்து உள்ளன. ஆனால், தமிழக அரசு அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இதேபோல், மத்திய அரசின், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மூலம், அனைத்து பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர் பயிற்சி வழங்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
