UPDATED : ஜூலை 21, 2009 12:00 AM
ADDED : ஜூலை 21, 2009 03:15 PM
சென்னை: “அரசு கல்லூரிகளில் பட்டப் படிப்புக்கு கட்டணம் கிடையாது. கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து புகார் கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்,” என அமைச்சர் பொன்முடி கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:
புஷ்பராஜ் - தி.மு.க: விழுப்புரத்தில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படுமா?
அமைச்சர் பொன்முடி: தேனி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய பின்தங்கிய ஏழு மாவட்டங்களில் பாலிடெக்னிக்குகள் அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இதுகுறித்த கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே இடம் பார்க்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
விஷ்ணுபிரசாத் - காங்: அரசு கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசு அறியுமா?
அமைச்சர்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்புக் கட்டணம் (டியூஷன் பீஸ்) ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் யாரும் பணம் கட்டத் தேவையில்லை. எங்காவது கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கொடுத்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும்.
ராஜேந்திரன் - காங்: மதுரையில் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - மத்திய பல்கலைக்கழகம் போன்ற ஏதாவது ஒன்றை அமைக்க பரிந்துரை செய்யப்படுமா?
அமைச்சர்: மதுரையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி உள்ளது. ஐ.ஐ.எம்., கல்வி மையம் திருச்சிக்கு வழங்கப்பட்டுவிட்டதால் அதை மதுரைக்கு மாற்ற இயலாது. மதுரையில் அந்தக் காலத்தில் இருந்தே அமெரிக்கன் கல்லூரி போன்ற பல கல்லூரிகள் உள்ளன. எனவே, முதலில் பசி ஏப்பக்காரர்களை கவனித்துவிட்டு பின் புளி ஏப்பக்காரர்களை அரசு கவனிக்கும்.
அப்பாவு - காங்: திசையன்விளை பின் தங்கிய பகுதி. அப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி, உறுப்புக் கல்லூரி துவங்கப்படுமா? அதற்கான நிலமும் உள்ளது.
அமைச்சர்: கடந்த ஆண்டு தான் நெல்லை பல்கலைக் கழகம் மூலம் ஒரு கல்லூரி துவக்கப்பட்டது. பின்தங்கிய 22 மாவட்டங்களில் கல்லூரிகளை உருவாக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அப்போது உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
பீட்டர் அல்போன்ஸ் - காங்: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை, கட்டணம் ஆகியவற்றை மாநில அரசே செய்ய வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, இந்த ஆண்டே நிகர்நிலை பல்கலைக்கழகங்களை அரசு கவுன்சிலிங்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர்: நாங்கள் மத்திய அமைச்சர் கபில் சிபலை முதன் முதலாக சந்தித்தபோது வைத்த கேரிக்கை அது தான். நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 65 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என்றோம்.
அமைச்சர் கபில் சிபல், கட்டணத்தைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறார். இட ஒதுக்கீடு பற்றி சொல்லவில்லை. அவர் தமிழகம் வருகிறார். அப்போது தெளிவான முடிவு எடுக்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் இருந்து கவுன்சிலிங் குறித்த முடிவுகளை அரசு எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
