UPDATED : ஜூலை 25, 2009 12:00 AM
ADDED : ஜூலை 25, 2009 03:57 PM
ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் ‘ராமலிங்கசுவாமி பெல்லோஷிப்‘ பெற்ற ஆராய்சியாளர் டாக்டர் உந்துர்தி தாஸ்.
இவர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தம் ஆராய்ச்சிக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும் பிற வசதிகள் இருப்பதாகவும், அதனால் தனது ஆராய்ச்சியை பாரதி வித்யாபீட பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலிருந்து காக்கிநாடாவில் இருக்கும் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு மாற்றித் தரும்படி மத்திய உயிர் தொழில் நுட்பத்துறையை கோரியிருந்தார்.
இதனையேற்று மத்திய உயிர் தொழில்நுட்பத்துறை அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜே.என்.டி.யூ.,வின் உயிரி தொழில்நுட்ப பிரிவில் வசதிகளை மேம்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது. செல் கல்சர் வசதி, எலைசா ரீடர், போட்டோகிராபிக் அட்டாச்மென்டுடன் கூடிய பைனாக்குலர் மைக்ரோஸ்கோப் போன்ற வசதிகளும் அடங்கும். இந்நிலையில் டாக்டர் தாசின் ஆராய்ச்சிக்கு தேவையான பிற வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதாக ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒத்துக் கொண்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்தியிருப்பதால், டாக்டர் தாசுக்கு மட்டுமின்றி, பிற ஆராய்ச்சியாளர்களும் பயனடைவார்கள் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
