UPDATED : ஜூலை 26, 2009 12:00 AM
ADDED : ஜூலை 26, 2009 12:09 PM
அண்ணா பல்கலைக்கழகத்தின் ராமநாதபுரம் இன்ஜினியரிங் கல்லூரி நான்கு பாடப்பிரிவில் 235 மாணவ, மாணவிகளுடன் கடந்தாண்டு துவங்கப்பட்டது. ராமநாதபுரம் மதுரை ரோட்டில் தனியார் கட்டடத்தில் ஐந்து வகுப்பறைகளுடன் கல்லூரி இயங்கி வருகிறது.
கல்லூரிக்கு தேவிபட்டினம் ரோட்டில் புல்லங்குடியில் 44 ஏக்கரில் 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் பணி துவங்கும் என கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக 16 கோடி ரூபாய் அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது முதல் கட்டமாக ஏழு கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பணிகள் ஆமை வேகத்திலே துவங்கி உள்ளன.
தற்போதைய தனியார் கட்டடத்தில் முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் வகுப்பறைகள் உள்ளன. கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதலாமாண்டில் சேரும்போது இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பறைகள் பிரச்னை எழும். மேலும் லேப் வசதியும் இல்லாததால், இரண்டாமாண்டு மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது.
சொந்த இடத்தில் ஆகஸ்ட்டில் ‘ஏசி ’வசதியுடன் ஆறு வகுப்பறைகள், லேப் வசதி ஏற்படுத்தப்படும் என உறுதி கூறுகின்றனர். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. இரண்டாமாண்டு மாணவர்கள் பிரச்னையின்றி படிக்க முடியுமா என்பதும் கேள்விகுறியே. இது ஒரு புறம் இருக்க கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கான விடுதி ராமநாதபுரம் பாரதி நகர் மற்றும் நேருநகர் பகுதி தனியார் கட்டடத்தில் உள்ளது.
இங்கு கழிவு நீர் தொடர்பாக, மாணவிகள் தினமும் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவை அனைத்துக்கும் புதிய கட்டடம் தான் தீர்வு. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க அரசு முயற்சிக்க வேண்டும்.
