UPDATED : ஜூலை 28, 2009 12:00 AM
ADDED : ஜூலை 28, 2009 12:31 PM
மும்பை: உலகளவில், 55 நாடுகளில் இந்திய மாணவர்கள் படிப்பதாக, வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் குறித்து, வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகளவில் உள்ள 55 நாடுகளில், மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான, இந்திய மாணவர்கள் பயிலுகின்றனர்.
இந்த மாணவர்கள் அனைவரும், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இந்திய தூதரகங்களில் பதிவு செய்வதில்லை. முன்பெல்லாம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு தான் அதிகளவிலான இந்திய மாணவர்கள் சென்றனர். தற்போது ஈராக், கம்போடியா, லிபியா, ஐஸ்லாந்து, க்யூபா போன்ற நாடுகளுக்கும், இந்திய மாணவர்கள் செல்கின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கடந்த 2007ம் ஆண்டு, உலகளவில், 28 லட்சம் மாணவர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளில் படித்தனர்’ என ‘யுனெஸ்கோ’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை 2025ம் ஆண்டு, 80 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
