முதல்கட்ட கவுன்சிலிங் நிறைவு: 45,695 பேருக்கு சீட்
முதல்கட்ட கவுன்சிலிங் நிறைவு: 45,695 பேருக்கு சீட்
UPDATED : ஜூலை 30, 2009 12:00 AM
ADDED : ஜூலை 30, 2009 11:36 AM
ஜூலை 30ம் தேதி (இன்று) துவங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கவுள்ள இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு 58 ஆயிரத்து 644 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட கவுன்சிலிங்கில் 59 ஆயிரத்து 848 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 14 ஆயிரத்து 18 பேர் (23.40 சதவீதம்) கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. முதற்கட்ட கவுன்சிலிங்கில் மொத்தம் 45 ஆயிரத்து 695 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இ.சி.இ., படிப்பை 11 ஆயிரத்து 990 பேர், மெக்கானிக்கல் படிப்பை 8,010 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை 6,488 பேர், இ.இ.இ., படிப்பை 6,089 பேர், சிவில் படிப்பை 3,843 பேர், தகவல் தொழில் நுட்பப் படிப்பை 3,619 பேர், இ.ஐ.இ., படிப்பை 1,235 பேர் தேர்வு செய்துள்ளனர்.
முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளில் 106 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 27 இடங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் 61 ஆயிரத்து 59 இடங்கள் என, மொத்தம் 61 ஆயிரத்து 192 இடங்கள் காலியாக உள்ளன.
முதற்கட்ட கவுன்சிலிங்கில் தினசரி 3,000 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். ஆனால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் தினசரி 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
துணைவேந்தர் தேர்வு நடைமுறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து விவாதிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேர்வில் அரசியல் தலையீடு தவிர்க்க முடியாதது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், துணை முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு ஆகஸ்ட் 1ம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் பட்டமளிப்பு விழா உரையும், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் சிறப்புரையும் ஆற்றுகின்றனர். இவ்வாறு பொன்முடி கூறினார்.
