UPDATED : ஆக 04, 2009 12:00 AM
ADDED : ஆக 04, 2009 11:55 AM
சென்னை: “வரும் கால கட்டங்களில் சமையல் துறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்” என்று சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு பேசினார்.
சென்னை, தரமணியில் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் ‘உணவக மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்பக் கல்லூரி’ இயங்கி வருகிறது. இங்கு விருந்தோம்பல், உணவு விடுதி நிர்வாக துறையில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன.
இக்கல்லூரியின் சார்பில் பணியாளர்களுக்கான திறன் வளர்ப்பு திட்டத்தின்கீழ் விருந்தோம்பல் திறன் சான்றிதழ் பயிற்சி, உணவு சமையல் கலை குறித்த எட்டு வார பயிற்சி, உணவு பரிமாறும் முறை குறித்த ஆறு வார பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
பயிற்சி துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் ராஜமோகன் வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரியின் தலைவரும், சுற்றுலாத்துறை செயலருமான இறையன்பு பேசியதாவது: சுவையும், மணமும் நன்றாக இருக்கும் ஓட்டல்களில் சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கு விளம்பரம் தேவையில்லை. ஒரு தாயின் சமையலுக்கும், மற்றவர்கள் சமைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
சமையல் கலைஞர்களுக்கு சிறந்த திறனும், நல்ல மனப்பான்மையும் வேண்டும். இந்த காலத்தில் உணவகங்கள் அதிகரிப்பதன் காரணம், சிறந்த விருந்தோம்பல் இருப்பதுதான். ருசி முக்கியம் என்பதற்காக ஆரோக்கியத்தை விட்டுவிட முடியாது. உடலுக்கு கேடு விளைவிக்கும் எதையும் பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி ‘வெயிட்டர்’களுக்கும் மிக முக்கியமானது. ஐந்தாயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், பயிற்சி பெற இளைஞர்கள் தயாராகவேண்டும். வரும் காலங்களில் இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இத்துறை வளர்ச்சி பெற்றால் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி பெறும்,’ என்றார்.
விழாவில், சுற்றுலாத்துறை இயக்குனர் சித்ரஞ்சன் மோகன்தாஸ், மெரீனா டவர்ஸ் பொது மேலாளர் ஜெயசங்கர் குப்தா, ரெசிடென்சி ஓட்டல் குழுமத்தின் சி.இ.ஓ., தரியன், ஏஷியானா ஓட்டல் இயக்குனர் (இயக்கம்) லியோ பெர்னான்டோ, ‘ஷெப்’கள் பாலகுருநாதன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
