நூற்றாண்டு கடந்த பள்ளி கட்டடம் சேதம்: மாணவர்கள் அவதி
நூற்றாண்டு கடந்த பள்ளி கட்டடம் சேதம்: மாணவர்கள் அவதி
UPDATED : அக் 07, 2009 12:00 AM
ADDED : அக் 07, 2009 01:05 PM
திருவள்ளூர்: பேரம்பாக்கம் பஜார் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
கடந்த 102 ஆண்டுகளுக்கு முன் ஆறு வகுப்பறைகளுடன் இப்பள்ளி துவக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி அருகில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த இரண்டு கட்டடங்களில் மாணவர்களை உட்கார வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர். இதையடுத்து நூற்றாண்டு விழா கண்ட இப்பள்ளியின் கட்டடத்தை சீரமைக்கவும், மேற்கூரையான நாட்டு ஓடுகளை திருத்தி அமைக்கவும் கடந்த 2007ம் ஆண்டு கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் விடப்பட்டது.
இதன்படி, ஒப்பந்தகாரரும் பணியை முடித்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். 2007ம் ஆண்டு சீரமைத்த இக்கட்டடத்தின் மேற்கூரை சீரமைத்த ஒரே ஆண்டில் திடீரென இடிந்து விழுந்தது. இரண்டாண்டுகள் ஆகியும் எவ்வித பணியும் நடைபெறாததால் பள்ளிக் கட்டடம் மூடியே உள்ளது. இக்கட்டடத்தில் நடந்து வந்த அனைத்து வகுப்புகளும் புதிய கட்டடத்தில் இடவசதியின்றி நடத்தப்பட்டு வருவதால், மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு, சீரழிந்த நிலையில் உள்ள நூற்றாண்டு விழா கண்ட பள்ளிக் கட்டடத்தை மீண்டும் சீரமைக்க திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
