UPDATED : அக் 12, 2009 12:00 AM
ADDED : அக் 12, 2009 04:00 PM
பெங்களூரு: வரும் 2014ம் ஆண்டில் விண்வெளிக்கு முதன் முதலாக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெண் விஞ்ஞானியை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தி, நிலவில் தண்ணீர் உள்ளதை உலகுக்கு நிரூபித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, 2014ம் ஆண்டு விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில், இரு விஞ்ஞானிகளையும் விண்வெளிக்கு அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இரு விஞ்ஞானிகளில் ஒருவர் பெண் விஞ்ஞானியாக இருப்பார். இவர், இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்த விஞ்ஞானியாகவே உள்ளவர்களில் ஒருவருக்கு தான் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அப்பெண் விஞ்ஞானி யார் என்பதை இஸ்ரோ இன்னமும் முடிவு செய்யவில்லை என்றாலும், அவர் முழுக்க முழுக்க இந்திய குடிமகளாகவே இருப்பார் என்பது உறுதி’ என, இஸ்ரோ சாட்டிலைட் சென்டர் இயக்குனர் அலெக்ஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், ‘இந்த ராக்கெட்டின் பாகங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்படுகிறது. அதன் கட்டுப்பாட்டுக்கான மின்னணு இயந்திரங்கள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இவ்விரண்டும் இணைக்கப்பட்டு விண்வெளிக்கலம் உருவாக்கப்படும். இதற்கு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும். அத்தொகை மத்திய அரசு இஸ்ரோவுக்கு வழங்கும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இதற்கான பயிற்சி மையம் துவங்கப்படும்’ என்றும், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் அமெரிக்க விண்கலத்தில் பயணித்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் அமெரிக்க பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1984ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் ராகேஷ் சர்மா தான் ரஷ்ய விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்பதும் அவர் விண்வெளியில் எட்டு நாட்கள் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
