UPDATED : அக் 21, 2009 12:00 AM
ADDED : அக் 21, 2009 12:08 PM
புதுச்சேரி: செடியில் இருந்து வேர்க்கடலையை (மணிலா) தனியாக பிரித்தெடுக்கும் மிஷினை தலைமையாசிரியர் கண்டுபிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி (42). தற்போது புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் இவர், வானூர் ஒன்றியம், பொன்னம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு சிறு வயதிலிருந்து விவசாயிகளுக்கு பயன்படும் விதத்தில் ஏதேனும் ஒரு கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது.
வேர்க்கடலையை (மணிலா) செடியிலிருந்து பிரித்தெடுக்கும் மிஷினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட உபகரணங்கள் கிரைண்டர் மோட்டார், ஒரு சில இரும்பு பட்டைகள், அலுமினிய தகடு. மின்சாரத்தில் இயங்கும் இந்த மிஷின் தயாரிப்பதற்கான மொத்த செலவு 3,000 ரூபாய்.
இதுபற்றி அந்தோணி கூறியதாவது:
வேர்க்கடலை செடியை கொத்தாக பிடுங்கி கையில் வைத்துக் கொண்டு, இந்த மிஷினில் உள்ளே இருக்கும் விசிறியில் காண்பித்தால் வேர்க்கடலை மட்டும் தனியாக உதிர்ந்து கீழே விழும். ஒரு மணி நேரத்தில் ஒரு மூட்டை வரை வேர்க்கடலையை பிரித்தெடுக்கலாம். வேர்க்கடலை மட்டுமின்றி உளுந்து, விதை நெல் போன்றவற்றையும் இந்த மிஷின் மூலம் பிரித்தெடுக்க முடியும். இந்த மிஷினைப் பற்றி அறிந்த விவசாயிகள் நேரில் வந்து செயல் விளக்கத்தை பார்த்து, தங்களுக்கும் தேவை என கேட்கின்றனர்.
இந்த மிஷின் கண்டுபிடிப்பு பற்றி புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு தெரிவித்தேன். விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். அடுத்ததாக தென்னை மரத்தில் ஏறாமல், ‘லிப்ட்’ மூலம் ஏறி தேங்காய் பறிப்பதற்கான மிஷினை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்’ என்றார்.
