விடைத்தாள் திருத்தம் ஆசிரியர்களுக்கு கட்டாயம்: சென்னை பல்கலை
விடைத்தாள் திருத்தம் ஆசிரியர்களுக்கு கட்டாயம்: சென்னை பல்கலை
UPDATED : அக் 21, 2009 12:00 AM
ADDED : அக் 21, 2009 01:43 PM
சென்னை: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாவதற்கு ஏதுவாக, ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது என்று துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் காலதாமதம் ஏற்படுவதற்கு போதிய ஆசிரியர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வராததே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சுயநிதி கலைக் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள்தான் அதிக அளவில் விடைத்தாள் திருத்த முன்வருவதில்லை. எனவே தகுதி உள்ள கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள்திருத்துவது கட்டாயமாக்குவது என்று சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர்கள் மற்றும் செயலாளர்களுடனான கூட்டம் 30ம் தேதி நடைபெற உள்ளது. அதில் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனத்தின் போது அவர்களின் கல்வித்தகுதியை பல்கலைக்கழகத்தில் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும். புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்படும்.
அந்தந்த பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் பாடத்திட்டம் தயாரித்து கல்லூரிகள் வழங்கவேண்டும். அதை செம்மைபடுத்தி பல்கலைக்கழகம் வழங்கும். புதிய படிப்புகளை துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்ளைடு தமிழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல்., எம்.இ., பி.இ. உள்ளிட்ட படிப்புகளில் கடந்த ஆண்டுகளில் சேர்ந்து இன்னும் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு டிசம்பர் மாதம் தான். இதில் எம்.எல்., படிப்புக்கு 10 ஆயிரம் அபராத தொகையும். மற்ற படிப்புகளுக்கு ரூ.15 ஆயிரமும் செலுத்தவேண்டும். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
