‘சமச்சீர் கல்வியால் மெட்ரிக் பள்ளிகளுக்கு பாதிப்பு வராது’
‘சமச்சீர் கல்வியால் மெட்ரிக் பள்ளிகளுக்கு பாதிப்பு வராது’
UPDATED : அக் 21, 2009 12:00 AM
ADDED : அக் 21, 2009 05:40 PM
கோவை: “சமச்சீர் கல்வி முறையால் மெட்ரிக் பள்ளிகளுக்கு எந்தவித பாதிப்பும் வராது. மெட்ரிக் பள்ளிகளின் திறமையை மேம்படுத்த புதிய கல்வி முறை உதவும் என்பதால் பயப்படாமல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” என்று கோவையின் புதிய மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இளங்கோ கூறினார்.
கோவையின் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்(ஐ.எம்.எஸ்.,) ஆக பதவி வகித்து வந்த காளியண்ணன், கோபிச்செட்டிப்பாளையம் கல்வி மாவட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய ஐ.எம்.எஸ்., ஆக இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சேலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் கூறியதாவது:
மெட்ரிக் பள்ளிகள் தங்கள் அங்கீகாரத்தை தக்க தேதியில் புதுப்பித்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். குறித்த நேரத்தில் புதுப்பிக்கத் தவறிய பள்ளிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். நிலுவையில் உள்ள பள்ளி அங்கீகார கருத்துருக்களின் மீது ஆய்வு நடத்தப்பட்டு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும். இதுவரை அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் தகுந்த ஆவணங்களுடன் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளியில் மாணவர் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொரு பள்ளியும் நிறைவேற்றுவது நல்லது. பள்ளி மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் நெளிவு சுளிவுகளுடன் பள்ளி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டும். மெட்ரிக் பள்ளிகளில் முடிந்தவரையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறந்தது. இதுவரை பயிற்சி பெறாத ஆசிரியர்களை பணியில் அமர்த்தியுள்ள பள்ளிகள், இனியாவது பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதிக கட்டணத்தால் மாணவர், பெற்றோர் பாதிக்காத வகையில், பெற்றோர் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி கட்டண தொகையை நிர்ணயிப்பது அனைவருக்கும் நல்லது. சமச்சீர் கல்வி முறையால் மெட்ரிக் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. தங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும் என வீணாக பயப்படத் தேவையில்லை. மெட்ரிக் பள்ளிகளின் திறமையை மேலும் துõண்டுவதாக புதிய பாடத்திட்டம் அமையும் என்பதால், புதிய கல்வி முறையை அமல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோ கூறினார்.
