UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM
ADDED : ஜூன் 21, 2023 04:53 AM
தமிழகத்தில் 12,000 தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீத இடங்கள், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று 80 ஆயிரம் பேருக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம், பள்ளிக்கல்வி துறையின் சார்பில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே இலவச பாட புத்தகம் வழங்குவதாக உறுதி அளித்தாலும், இன்னும் வழங்கப்படவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்க வேண்டிய கல்வி கட்டண நிலுவை தொகையை விரைந்து வழங்கினால் தாங்கள் பள்ளிகளில் செலுத்திய கல்வி கட்டணம், திரும்ப கிடைக்கும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
