UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM
ADDED : ஜூன் 22, 2023 03:49 AM
சென்னை, அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுடன் யோகா பயிற்சி செய்தனர்.பின் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மட்டும் தான், சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவ முறைகளுக்கும் கல்லுாரிகள் உள்ளன. இவற்றிற்கு, சித்த மருத்துவ பல்கலை வேண்டும் என்பதற்காக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் அனுப்பினால் பல்கலை வேந்தராக கவர்னர் தான் இருக்க வேண்டும். துணை வேந்தரையும் அவரே தான் நியமிக்க வேண்டும் என பதில் கூறுகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே மீன்வள பல்கலை வேந்தராக முதல்வர் இருப்பதும் துணைவேந்தர்களை அவரே நியமிப்பதும் நடந்து வருகிறது.குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், இதேபோன்ற சூழலில் மாநில முதல்வர்களே துணை வேந்தர்களை நியமித்துக் கொள்ளலாம் என்ற வகையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக மக்களிடம் சித்த மருத்துவத்திற்கு ஆதரவு அதிகம் உள்ளது. எனவே கவர்னர் ஒப்புதல் அளித்தால் இந்தியாவிலேயே முதல் சித்த மருத்துவ பல்கலை தமிழகத்தில் அமைந்தது என்ற பெருமை கிடைக்கும். கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுதும் 100 மருத்துவ முகாம்கள் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
