UPDATED : செப் 07, 2023 12:00 AM
ADDED : செப் 07, 2023 09:15 AM
ஊத்துக்கோட்டை:
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, பல் டாக்டருக்கு வாய்ப்பு கிடைத்தும் மகளை மேற்கொண்டு படிக்க வைக்க வசதி இல்லாததால் கூலி தொழிலாளியின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணை காலனியில் வசிப்பவர் நந்தகுமார், 42; ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு மனைவி சுஜாதா 40, தமிழ்விழி, கனிமொழி என்ற இரு மகள்கள். தமிழ்விழி, கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, பிளஸ் 2 தேர்வில் 600க்கு 418 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து பல் டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு எழுதினார். இதில் 115 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜெ.கே.கே.என்., பல் மருத்துவ கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், மேற்படிப்பை தொடர முடியாத நிலை குறித்து, தமிழ்விழி கூறியதாவது:
பல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், படிக்க வைக்க, பெற்றோரிடம் வசதி இல்லை. என் தந்தை சொந்தமாக ஆட்டோ வைத்திருந்தார். என் படிப்பிற்காக அதை விற்று, கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது வருமானம் வீட்டிற்கே போதுமானதாக இல்லை. இதில் எப்படி மேற்கொண்டு படிப்பேன் என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்விழியின் தந்தை நந்தகுமார் கூறியதாவது:
அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசிக்கிறோம். இளைய மகள் பிளஸ் 1 படித்து வருகிறாள். மூத்த மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, பல் டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால், அதற்கு பொருளாதார வசதி என்னிடம் இல்லை.தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்து, என் மகளின் டாக்டர் கனவை நனவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 89396 74836.
