UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 09:10 AM
மசக்காளிபாளையம்:
மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கீ போர்டு வாசித்தல், ரோபோட்டிக்ஸ், குங்பூ, கேரம் வகுப்புகள் நடக்கிறது.ஒரு பள்ளிக்கூடம், வீடு போன்ற சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். பாடப்புத்தகங்களை மட்டுமே திருப்பி கொண்டிருக்காமல், திறன்கள் வளர்த்தெடுக்கும் மையமாக மாற்ற வேண்டுமென்ற, முனைப்பில் கொண்டு வரப்பட்டது தான், தனித்திறன் வகுப்புகள் என்கிறார், தலைமையாசிரியை மைதிலி. சமீபத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற இவருக்கு வாழ்த்து தெரிவித்து, மாணவர்களுடன் இணைந்தோம்.மைதானத்தில், 30 மாணவர்கள் வரிசையாக நின்று, குங்பூ பயிற்சி பெற்று கொண்டிருந்தனர். கம்ப்யூட்டர் திரையில் உள்ள ரோபோக்களின் மாதிரிகளை பார்த்து பார்த்து, &'மாடூல்&'களை உருவாக்குவதில், பிசியாக இருந்தனர் சிலர். அடுத்த வகுப்பறைக்குள் நுழைந்ததும், கீபோர்டு, கிடார் பயிற்சி வகுப்பு நடந்தது. பிஞ்சுகளின் நுனிவிரல்கள், கீ போர்டுகளில் தவழ்ந்து கொண்டிருந்தன. ஆசிரியர்களின் ஓய்வு அறை, கேரம் பயிற்சி அறையாக மாற்றப்பட்டிருந்தது. அங்கே குழுவாக மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.நான்காம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலான, பள்ளியை சுற்றி குடியிருக்கும் மாணவர்களுக்கு மட்டும், சனிக்கிழமைதோறும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பே, தனித்திறன் வகுப்புகள் பள்ளிகளில் செயல்பட்டன. கொரோனாவுக்கு பின், குழந்தைகளை ஒருங்கிணைப்பதில் இருந்த சிக்கலால், நடப்பாண்டில் தான் மீண்டும் வகுப்புகளை துவக்கியிருக்கிறோம் என்றார் ஆசிரியர் சக்திவேல்.ஆரம்ப வகுப்பில் இருந்தே குழந்தைகளின் தனித்திறன்களை கண்டறிந்து ஊக்குவித்தால் தான் பின்னாளில் மாஸ்டராக வருவார்கள் என்கின்றனர், ஆசிரியைகள் திவ்யாமேரி, கோகிலா ஆகிய இருவரும்.நாம் ஆமோதித்து நகர்ந்தோம்.
செஸ், ஓரிகாமி வகுப்புகளும் துவங்கப்படும். பெற்றோருக்கு இலவச தையல் பயிற்சி அளிக்க முடிவெடுத்தோம். ஐந்து தையல் மெஷின்கள் உள்ளன. வீட்டிலிருக்கும் ஆர்வமுள்ள பெற்றோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். படிப்பு மட்டுமல்லாமல், பல்வேறு திறன்களும் கற்கும் இடமாகவும், வளர்த்தெடுக்கும் மையமாகவும், பள்ளியை மாற்றுவதே ஆசிரியர்களின் விருப்பம். இது, ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமானது என்கிறார், தலைமையாசிரியை மைதிலி.
