காலாண்டு தேர்வுக்கு 100 சதவீத வருகை: தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
காலாண்டு தேர்வுக்கு 100 சதவீத வருகை: தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 04:56 PM
கோவை:
பொது வினாத்தாள் பாணியில் காலாண்டு தேர்வு நடப்பதால், அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்வெழுத வைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் தயாரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை நகலெடுத்து பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 10 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்கள் வாயிலாக, அந்தந்த பள்ளிகளுக்கு, தேர்வு நாளன்று காலையில் வினாத்தாள் அனுப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன. இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டு முழுமையாக நடந்ததால், மாணவர்களின் கற்றல் திறன் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தேர்வுக்கு, அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டுமென, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பள்ளிகளில் தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர். தற்போது தொடர் விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது.இருப்பினும் காலாண்டு தேர்வில், நுாறு சதவீத வருகைப்பதிவுக்கு உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பின், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
