தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 08:39 AM
கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.கடலுார் கலெக்டர் அலுவலத்தில், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுடன் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் மதுபாலன், சி.இ.ஓ., பழனி பங்கேற்றனர்.அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, பேசுகையில், மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும், பாடங்களை புரிந்து படிப்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், விளையாட்டு உள்ளிட்ட ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். பின், அவர், நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இடைநின்ற 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி, மாணவர்களின் தனித்திறமை, படிப்பு திறன் குறித்து மாதந்தோறும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக கடலுார் நகரில் வாய்க்கால்கள் துார்வாரும் பணி துவங்கப் பட்டுள்ளது என்றார்.
