ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மீண்டும் அசைவ உணவு திட்டம்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மீண்டும் அசைவ உணவு திட்டம்
UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 09:12 AM
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் ஏழ்மையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள், 4 பிராந்தியங்களிலும் தங்கி படிக்க ஏதுவாக, ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் 27 மாணவர் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 8 விடுதிகள் மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த விடுதிகளில், ஆறாம் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ மாணவிகள் இலவசமாக தங்கி படிக்கலாம். மாணவர்களுக்கு தேவையான உணவு, படுக்கை, சோப், பெட்ஷீட் என அனைத்தையும் ஆதிதிராவிடர் நலத் துறை இலவசமாக வழங்கி வருகின்றது. இதற்காக ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் வரை செலவிட்டு வருகிறது.இந்த மாணவர் விடுதிகளில் 80 சதவீதம் ஆதிதிராவிடர் மாணவர்கள் மட்டுமின்றி, 20 சதவீதம் இதர பிரிவு மாணவர்கள் தங்கி படிக்க முடியும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சைவ உணவு மட்டுமின்றி அசைவ உணவுகளும் பரிமாறப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதால் அசைவ உணவு திட்டம் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்டது. படிப்படியாக கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும், நிர்வாக காரணங்களால் அசைவ உணவு திட்டம் செயல்படுத்தப்படவில்லை.இது தொடர்பாக விடுதி மாணவர்கள் முதல்வரிடம் முறையிட்டனர். அதையடுத்து, அமைச்சர் சந்திர பிரியங்கா, துறையின் செயலர் கேசவன், இயக்குநர் இளங்கோவன் ஆகியோருடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அதை தொடர்ந்து மாணவர் விடுதிகளில் அசைவ உணவுகளை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். அதன்படி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் அசைவ உணவு திட்டம் மீண்டும் துவங்கப்பட்டது. முதல் நாளான நேற்று புதுச்சேரி, காரைக்காலில் 2,500 மாணவர்களுக்கு உணவுடன், சுடச்சுட மீன் வறுவல் வழங்கப்பட்டது.அனைத்து மாணவர் விடுதிகளிலும் இனி அசைவ உணவு திட்டம் தடைபடாமல் செயல்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சராசரியாக 100 கிராம் இறைச்சி், கல்லுாரி மாணவர்களுக்கு 150 கிராம் இறைச்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.துறை இயக்குநர் இளங்கோவன் கூறும்போது, முதல்வர் ரங்கசாமி, துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் அசைவ உணவு திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் சிக்கன், வியாழன்-மீன், சனி- மட்டன் உணவு வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டிற்கு 2.5 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றார்.
