UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 10:09 AM
புதுச்சேரி:
கட்டுமான நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை வழங்காததால், கோர்ட் உத்தரவுப்படி, புதுச்சேரி பல்கலைக்கழக ஆடிட்டோரிய கட்டடம் ஜப்தி செய்யப்பட்டது.புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில், நாடு முழுவதிலுமிருந்து 4,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக இரண்டாவது நுழைவு வாயில் அருகே ரூ.6 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆடிட்டோரியம் கட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.ஆடிட்டோரியம் கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், நிலுவைத் தொகை ரூ. 4.19 லட்சம் கட்டுமான நிறுவனத்திற்கு தரப்படவில்லை. அதனால் கட்டுமான நிறுவனம் புதுச்சேரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், நிலுவை தொகையை வழங்க உத்தரவிட்டது. அதன்பிறகும் பல்கலை தொகையை வழங்கவில்லை.கட்டுமான நிறுவனம் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்ற நீதிமன்றம், புதிய ஆடிட்டோரிய கட்டடத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை கோர்ட் அமீனா வெங்கட், வி.ஏ.ஓ., வேல்முருகன், மனுதாரரின் வழக்கறிஞர் பார்த்திபன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று புதிய ஆடிட்டோரிய கட்டடத்தை ஜப்தி செய்து, அதற்கான நோட்டீசை ஒட்டினர்.மேலும் இதற்கான நோட்டீசை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் ஒட்டினர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
