போராட்டத்தை வாபஸ் பெற்றது ஏன்: சங்கத்தினரிடம் ஆசிரியர்கள் சரமாரி கேள்வி
போராட்டத்தை வாபஸ் பெற்றது ஏன்: சங்கத்தினரிடம் ஆசிரியர்கள் சரமாரி கேள்வி
UPDATED : அக் 14, 2023 12:00 AM
ADDED : அக் 14, 2023 12:00 PM
சென்னை:
போராட்டத்தை இரவோடு இரவாக வாபஸ் வாங்கியது ஏன் என சங்க நிர்வாகிகளை சூழ்ந்து, ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 30 அம்ச கோரிக்கைகளுக்காக, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.இதுதொடர் போராட்டமாகி விடுமோ என, பள்ளிக் கல்வித்துறை கருதியதால், போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று முன்தினம் மாலையில், அமைச்சர் வீட்டுக்கு சென்று பேச்சு நடத்தியதில், 11 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதற்கு பதிலாக, ராஜரத்தினம் மைதானம் அருகே விளக்க கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், போராட்டத்துக்காக வெளி மாவட்டங்களில் இருந்து, நேற்று சென்னை வந்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், போராட்டம் ரத்தானதால் அதிர்ச்சி அடைந்தனர். போராட்டத்திற்குப் பதிலாக விளக்க கூட்டம் துவங்கிய நிலையில், ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், நிர்வாகிகளை முற்றுகையிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டம் அறிவித்து விட்டு, இரவோடு இரவாக வாபஸ் பெற்றது ஏன்; எங்களை ஆலோசிக்காமல் எப்படி வாபஸ் பெறலாம்; பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கை குறித்து பேச்சு நடத்தாமல் தவிர்த்தது ஏன் என்று, சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால், அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், அவர்களை சமாதானம் செய்யும் வீடியோ, ஆசிரியர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் வெளியாகி உள்ளது.எச்சரிக்கை
சமீப காலமாக பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் உள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், ஆசிரியர் சங்கத்தினர் கூடி போராட்டம் நடத்துவது அதிகரித்துள்ளது. அதனால், பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளதாக, போலீசார் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து, இனி டி.பி.ஐ., வளாகத்தில், போராட்டம் நடத்தினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
