UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 10:42 AM
கல்வி, கேள்வி அறிவில் குழந்தைகள் சிறந்து விளங்க, விஜயதசமி திருநாளன்று வித்யாரம்பம் செய்து, ஆரம்ப கல்விக்கு பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். இப்படி பாரம்பரிய வழக்கத்தை பின்பற்றும் பெற்றோர், நம் பண்பாடு, கலாச்சாரம், மரபுகளையும் குழந்தைகளுக்கு சொல்லி தருவது அவசியம்.கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து தனிக்குடும்பங்களாக மாறிய பிறகு, தொலைக்காட்சி தொடர்களே, கதை சொல்லிகளாக மாறிவிட்டன. பல குழந்தைகள், வீட்டிலுள்ளவர்களுடன் அமர்ந்து சீரியல் பார்ப்பது, படம் பார்ப்பது என பொழுதுபோக்கு அம்சங்களில் மூழ்கி விடுகின்றனர்.ஆனால், இந்த பொழுதுபோக்கு கருத்துகள், குழந்தைகளை மையப்படுத்தி தயாரிக்கப்படுபவை அல்ல. குட்டீஸ்களுக்கான சேனல்களிலும், மாயை கதைகள், வன்முறை கொண்ட கதைகளே அதிகம் இடம்பெறுகின்றன.குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கி செல்லும் பெற்றோர், அவர்களின் ஆரம்ப கல்வி சிறக்க வித்யாரம்பம் செய்வது, தலைசிறந்த பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது, விலைமதிப்புள்ள புத்தக பை, எழுதுகோல் வாங்கி தருவதோடு கடமை முடிந்ததாக கருதக்கூடாது.கல்வி தெய்வமான சரஸ்வதியின் அருள் பூரணமாக கிடைக்க, வித்யாரம்பம் செய்து பள்ளிக்கூட வாசலை மிதிக்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் கேள்வி அறிவில் சிறந்து விளங்கவும், நம் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரங்களை மதிப்பதும் அவசியம். அவற்றை குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும். குறிப்பாக, ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், அவற்றில் வரும் கதாபாத்திரங்கள், அவர்களின் திறமைகளை, கதையாக குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.பெற்றோரை மதித்தல், ஆசிரியர்களை குருவாக வணங்குதல், பெரியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, பிறரை மதிப்பது, தினசரி இறைவனை வணங்குவது, நல்ல வார்த்தைகளை பேசுவது என, நற்பண்புகளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற, பழமொழி உண்டு. ஆரம்ப கல்வியில் நுழையும், இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இளம் பருவத்திலே ஒழுக்கம், பண்பு, நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லி தருவதோடு, அதிலிருந்து தவறும் பட்சத்தில், சுட்டிக்காட்ட தவறக்கூடாது.குறிப்பாக, ஒற்றை குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர், விட்டு கொடுப்பது, பிறருடன் இணைந்து விளையாடுவது, குழு உணர்வால் ஏற்படும் நன்மைகளை சொல்லி தர வேண்டும். அன்பு செலுத்த வேண்டிய தருணத்தில் பாசத்தை மழையாக பொழிவது போல, தவறு செய்யும் தருணங்களில் கண்டிக்காமல் விட கூடாது. ஏனெனில், தனிமனித ஒழுக்கம், நல்ல பண்புகளுடன் வளரும் குழந்தைகளே, நாட்டின் வளர்ச்சி குறியீடு.
