UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 07:56 PM
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 644 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.இங்கு, 33 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கீதா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாவட்ட கல்வி அதிகாரி சரஸ்வதியிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.அதில், பள்ளி ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக உள்ளனர். முறையாக வகுப்பிற்கு செல்வதில்லை. உடல்கல்வி ஆசிரியர் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்பிற்கு அழைத்து செல்வதில்லை. பள்ளி நேரங்களில் மாணவர்கள், பேருந்து நிலையம், சாலைகளில் திரிகின்றனர். லேப் உதவியாளர் அந்த பணிக்கு செல்லாமல் அலுவலகத்திலேயே உள்ளார் என சரமாரியாக புகார் தெரிவித்தனர். இதைக் கேட்ட மாவட்ட கல்வி அதிகாரி சரஸ்வதி, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் மாணவர்களில் வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார். இதில் உடல்கல்வி வகுப்பிற்கு சென்றால் எங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் இல்லை என புகார் தெரிவித்தனர். பின் ஆசிரியர்கள் கூட்டம் நடத்தினார்.அதில் அவர் கூறியதாவது:
மாணவர்கள் நல்வழிப்படுத்தி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவது ஆசிரியர்பணி. மேலும், காலை வகுப்பிற்கு வரும் மாணவர்கள், அனைத்து வகுப்பையும் புறக்கணிக்காமல் உள்ளனரா என ஆய்வு செய்ய வேண்டும்.முறையாக பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோரை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். பள்ளி நேரங்களில் சாலையில் திரியும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் தவறை சுட்டிக் காட்டி நல்வழிபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
