UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 04:53 PM
பெங்களூரு:
பெங்களூரு பல்கலைக் கழகத்தின் 58வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.பெங்களூரு பல்கலைக் கழகத்தின், 58வது பட்டமளிப்பு விழா, நகரின் ஞானஜோதி அரங்கில் நேற்று நடந்தது. இளங்கலை, முதுகலை பட்டபடிப்பு முடித்த, 13 ஆயிரத்து 707 மாணவர்கள்; 15 ஆயிரத்து 164 மாணவியர்; 204 பேருக்கு முனைவர் பட்டத்தையும், கர்நாடக கவர்னரும், பல்கலை வேந்தருமான தாவர்சந்த் கெலாட் நேற்று வழங்கினார்.சிறப்பாக படித்த மாணவர்களுக்கு 299 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் பிரதமர் தேவகவுடா, இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டன.விழாவில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:கல்வி, இலக்கியம், சமூக சேவையில் சிறப்பான சேவை புரிந்து, நாட்டுக்கு பெருமை சேர்த்ததற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.அறிவியல் உலகில் இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு சென்றமைக்காக இஸ்ரோ தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் அவர் வரவில்லை என்றாலும், அவர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.கர்நாடகா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. இளைஞர்களின் திறமையை ஊக்குவிப்பதன் வாயிலாக, உள்ளூர் பொருட்களை உலகறிய செய்யலாம். சுயசார்பு இந்தியாவாக மாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், பல்கலை துணை வேந்தர் ஜெயகர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
