உலகின் மிக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பாலக்காடு பேராசிரியர்கள்
உலகின் மிக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பாலக்காடு பேராசிரியர்கள்
UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 09:44 PM
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் உள்ள, ஐ.ஐ.டி.,யில் பணியாற்றும் ஐந்து பேராசரியர்கள், அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகம் வெளியிட்ட உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு, மூன்று ஆசிரியர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு ஆண்டும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகளவில் முதல் இரண்டு சதவீத ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியல், அவர்களின் ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் வெளியிடுவது வழக்கம்.இந்த பட்டியலில் இரண்டு மாறுபட்ட பிரிவுகள் உள்ளன. விஞ்ஞானிகளின், 2022 வரையிலான செயல்களை மதிப்பிடும் ஒரு பிரிவும், 2022 ஆண்டின் செயல்களை மட்டும் மதிப்பிடும் இன்னொரு பிரிவும் உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.இதில், முதல் பிரிவில் பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் சேஷாத்திரி சேகர், உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ்பேரி ஆகியோர், இடம் பிடித்துள்ளனர்.இந்த பிரிவு பட்டியலில், மொத்தம் 2,04,633 விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர். இரண்டாவது பிரிவில், உயிரியல் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ்பேரி, வேதியியல் பிரிவு பேராசிரியர் முனைவர் யுகேந்தர் கவுட் கோத்தகிரி, வேதியியல் மற்றும் உயிரியல் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் முனைவர் அப்துல் ரஷீத், மின் பொறியியல் பிரிவு இணைப்பேராசிரியர் சபரிமலை மணிகண்டன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.இந்த சாதனை, பாலக்காடு ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சி சிறப்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
