UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:45 AM
சிவகாசி:
வெம்பக்கோட்டை தாலுகா ஆலங்குளம் - சுண்டங்குளம் வழியே செல்லும் வைப்பாற்றின் தரைப் பாலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றுப் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் சுண்டங்குளம் வழியாக வைப்பாறு செல்கிறது. இதன் குறுக்கே முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே லட்சுமியாபுரம், செவல்பட்டி, கம்மாபட்டி, வலையங்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.தரைப்பாலம் உள்ள ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ள நிலையில் தற்போது பெய்த மழையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் ஓடுகின்றது. இதனால் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது.பள்ளி கல்லுாரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை கடக்க முயலும் போது தடுமாறி கீழே விழுகின்றனர். இதே நிலை கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு தரைப்பாலத்தை அகற்றி மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளி கல்லுாரி மாணவர்கள், மக்களின் நலன் கருதி இங்கு மேம்பாலம் அமைக்க அரசு முன் வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
