வகுப்பறைக்குள் மழைநீர்: புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
வகுப்பறைக்குள் மழைநீர்: புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 10:02 AM
இளையான்குடி:
இளையான்குடி அருகே சேத்துாரில் அரசு துவக்கப்பள்ளி கூரை ஓடு உடைந்து மழை நீர் உள்ளே ஒழுகுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.இளையான்குடி அருகே காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேத்துார் கிராமத்தில் பழமை வாய்ந்த அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 29 மாணவர்கள் படித்து வருகின்றனர்.2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளி கட்டடம் மிகவும் பழமையான கட்டடம் என்பதால் கூரை ஓடுகள் உடைந்தும்,தரைத்தளம் சேதமாகி உள்ளது. பலமுறை பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கியும், பள்ளி வகுப்பறைக்குள் மழை நீர் ஒழுகுகிறது.மாணவர்கள் வகுப்பறைக்குள் குடைகளை பிடித்தபடியும், சாப்பாட்டு தட்டை தலையில் வைத்தபடியும் அமர்ந்திருக்கும் அவலம் நீடித்து வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பள்ளி கட்டடத்தை உடனடியாக சீரமைக்கவும்,பள்ளி வளாகத்திற்குள் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
