UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 01, 2023 04:53 PM
பெங்களூரு:
பெங்களூருவில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 28 பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு கூடினர்.இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறுகையில், பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என மிரட்டல் செய்தியில் கூறப்பட்டுள்ளது, தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு படையினர் பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கக்கூடும். பெற்றோர்கள் பீதியடைய தேவையில்லை. கடந்தாண்டும், சில சமூக விரோதிகள் இது போன்று மிரட்டல் விடுத்தனர் என்றார்.மிரட்டல் செய்தி வந்த உடன், சில பள்ளிகள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். சில பள்ளிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை அழைத்து செல்லும்படி அறிவுறுத்தின. ஆசிரியர்கள், ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிகள் முன்பு குவிந்தனர்.
