பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்படாது: சி.பி.எஸ்.இ.,
பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்படாது: சி.பி.எஸ்.இ.,
UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 09:56 AM
பல்வேறு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முதலிடம் இரண்டாம் இடம் முதல் கிரேடு 2ம் கிரேடு என சிறப்பிடங்கள் வழங்கப்படுகின்றன.இந்த சிறப்பிடங்களால் மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமற்ற போட்டியும் மன அழுத்தமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த பிரச்னையை தீர்க்க தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பிடங்கள் மற்றும் தரவரிசைகளை நிறுத்தி 2017ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.இதேபோன்று மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சி.பி.எஸ்.இ. நடத்தும் பொது தேர்வுகளில் மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் அவர்களின் மதிப்பெண்ணை கணக்கிடும் முறை போன்றவற்றை தெரிவிக்குமாறு பல்வேறு அமைப்புகள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளன.சி.பி.எஸ்.இ.யை பொறுத்தவரை மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மண்டல அளவிலோ ஒட்டு மொத்தமாகவோ கணக்கிட்டு சிறப்பிடங்கள் வழங்கப்படுவதில்லை. உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் ஒரு மாணவர் ஐந்து பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியுள்ள நிலையில் அந்த மாணவர் ஏதாவது ஐந்து பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு கொள்ளலாம்.சி.பி.எஸ்.இ. வாரியம் சார்பில் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிட்டு சராசரி மதிப்பெண் குறிப்பிடுவது கிடையாது. உயர்கல்வி சேர்க்கையோ அல்லது வேலைவாய்ப்பு வழங்கலோ எதுவானாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
