UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 04:18 PM
புதுடில்லி:
புதுடில்லியில், பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்ற ஆறு பேரை கைது செய்த போலீசார், 48 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் சிறப்பு கமிஷனர் ரவீந்திர சிங் யாதவ் கூறியதாவது:
டில்லி, குருகிராம் மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதைப் பொருள் விற்பதாக போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. நோங்மைதம் ஜஷோபந்தா சிங்,36, தியாம் ரபிகாந்த சிங்,32, ருத்ரன்ஷ் குப்தா,33), லக்ஷய் பாட்டியா, கிரிக் அகர்வால், கல்லுாரி காலித் ஜாபர் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மணிப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து டில்லி, குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதை விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.மேலும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆறு பேருக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து, கூரியர் வாயிலாகவும் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். ஆறு பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
