UPDATED : டிச 15, 2023 12:00 AM
ADDED : டிச 15, 2023 06:30 PM
உடுமலை:
பள்ளி மேலாண்மை குழுவினருக்கான, பெற்றோர் செயலியில் குறிப்பிடப்படும் பிரச்னைகளுக்கு, விரைவில் தீர்வு காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வித்துறை அலுவலர்கள் என அனைவரையும் இணைக்கும் வகையில், பல்வேறு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டிலும் உள்ளது.இந்த செயலிகளை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வலர்களும் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி அந்த பள்ளிகளின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்கும், பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பதிவிடுவதற்கும், பள்ளி மேலாண்மை குழுவினருக்கான பெற்றோர் செயலியும் உள்ளது. இதில் பதிவிடப்படும் பிரச்னைகளுக்கு அந்தந்த துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:
பள்ளிகளுக்கான செயலி குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. விழிப்புணர்வு இருப்பினும், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து தெரியாமல் உள்ளது. சில பள்ளிகளிலும் இணைய வசதி குறைபாட்டினால், இந்த ஆன்லைன் செயலிகளை பயன்படுத்துவதில் பள்ளிகள் பின்தங்கி உள்ளன.ஆனால், செயலிகள் பள்ளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு, குடிநீர் பிரச்னை, மின்வினியோக பிரச்னை குறித்து பல புகார்கள் பெற்றோர் செயலியில் பதவிட்டிருக்கிறோம். இதற்கான முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, கூறினார்.
