புதிய கல்வி கொள்கை பாடத்திட்டம் இந்தாண்டு உண்டா... இல்லையா...?
புதிய கல்வி கொள்கை பாடத்திட்டம் இந்தாண்டு உண்டா... இல்லையா...?
UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 06:12 PM
புதுச்சேரி:
புதிய கல்வி கொள்கை நடப்பாண்டு அமல்படுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரியாமல் இணைப்பு கல்லுாரிகள் குழப்பத்தில் உள்ளன.நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் நடப்பு கல்வியாண்டில்(2023-24) தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம்,அதை சார்ந்த 101 இணைப்பு கல்லுாரிகளில் தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும்.இதில் தாய்மொழி கல்வி கற்க முக்கியத்துவம் என கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்தது.ஆனால், ஐந்து மாதங்கள் உருண்டோடியும் புதிய கல்வி கொள்கையின் கீழ் பாடங்கள் நடத்தப்படவில்லை. பழைய பாடத்திட்டன் கீழ் தான் பல்கலைக்கழக இணைப்பு கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.புதிய கல்வி கொள்கை நடப்பாண்டு உண்டா அல்லது இல்லையா என தெரியாமல் இணைப்பு கல்லுாரிகள் குழப்பத்தில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைப்பு கல்லுாரி பேராசிரியர்கள் கூறும்போது, புதுச்சேரி பல்கலைக்கழகம், அதன் இணைப்பு கல்லுாரிகளில் புதிய கல்வி கொள்கை நடப்பாண்டு அறிமுகப்படுத்தபடுகின்றது என்று அறிவிக்கப்பட்டாலும், அது வெற்று அறிவிப்போடு தான் நிற்கின்றது.இணைப்பு கல்லுாரிகளான எங்களுக்கு இன்னும் புதிய கல்வி கொள்கைக்கான பாடத்திட்டங்கள் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி பழைய கல்வி திட்டத்தின் கீழ் தான் பாடங்களை போதித்து வருகின்றோம்.புதிய கல்வி கொள்கைக் கான பாடத்திட்டம் தயாரித்து பல்கலைக்கழக அகடமி கவுன்சிலில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் பல்கலைக்கழக அகடமி கவுன்சிலில் புதிய கொள்கை எந்தந்த பாட பிரிவுகளில் அமல்படுத்தப்பட உள்ளது, எதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.எனவே நடப்பாண்டில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுமா என்பது தெளிவு இல்லாமல் புதுச்சேரி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை மூலம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றனர். புதிய கல்வி கொள்கை யின்படி இளநிலை பட்ட படிப்புகள் இனி 4 ஆண்டு கள் கற்று தரப்படும்.அதில் சேர்ந்தவர்கள் விருப்ப அடிப்படையில் அதிலிருந்து விலகி வேறு பணிக்கு செல்லலாம்.அப்போது சான்றிதழ் தரப்படும். அதன் பிறகு ஓராண்டு கழித்து கூட மீண்டும் வந்து படிப்பினை தொடரலாம். அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது கல்லுாரியில் அந்த படிப்பையே தொடர முடியும்.இதேபோல் புதிய கல்வி கொள்கையின்படி கல்லுாரி மாணவர்களின் வசதிக்கான அகாதெமிக் பேங்க் ஆப் கிரெடிட் போர்ட்டலில் (ஏபி.சி.,) கணக்கு உருவாக்கி கொள்ளலாம். இந்த ஏபிசி., என்னும் கணக்கானது, சம்பந்தப்பட்ட மாணவரின் பாட விவரங்கள், தரம் தொடர்பான தகவல் தொகுப்பை உள்ளடக்கி இருக்கும்.புதுச்சேரி பல்கலைக்கழகம், அதனுடனான இணைப்பு கல்லுாரிகள் இந்த வசதியை ஏற்படுத்தி வந்தன. இருப்பினும் புதிய கல்வி கொள்கை இந்தாண்டு உண்டா அல்லது இல்லையா என்று இன்னும் அதிகாரப்பூர்வாமாக அறிவிப்பு வெளியாகாததால் இணைப்பு கல்லுாரிகள் உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளன.
