இந்தியாவின் பெரும் ரிஷி திருவள்ளுவர்: பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு
இந்தியாவின் பெரும் ரிஷி திருவள்ளுவர்: பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு
UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 05:10 PM
திருச்செங்கோடு:
நம் நாட்டின் பெரும் ரிஷியாக திருவள்ளுவர் அறியப்படுகிறார். அவரது கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன என கவர்னர் ரவி பேசினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன வளாகத்தில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழக கவர்னர் ரவி, 15 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, 149 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
நம் நாடு, இளைஞர்களின் வளர்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. 100-வது சுதந்திர தினத்தில், முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி, இந்தியா சென்று கொண்டிருக்கிறது.கடந்த, 10 ஆண்டுக்கு முன், உலகளவில் பொருளாதாரம் மேம்பட்ட நாடுகளில், 10-வது இடத்திலிருந்து இந்தியா, இன்று, 5-வது இடத்தில் உள்ளது. விரைவில் முதன்மை நாடாக உருவாகும். புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில், உலகில் வளர்ந்த மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்றைய இளைஞர்கள், மின்னணு சாதனங்களுக்கு அடிமையாகாமல், தங்களது இலக்கை பெரிதாக நிர்ணயித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி துவங்கிய, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் பெரும் ரிஷியாக திருவள்ளுவர் அறியப்படுகிறார். அவரது கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், முதன்மை செயல் அலுவலர் அகிலாமுத்துராமலிங்கம், இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, -மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக, கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர், கவர்னரை வரவேற்றனர்.
