UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 09:55 PM
சென்னை:
மத்திய அரசின், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி, தமிழகத்தில் அரசு துறை அலுவலகங்களில், காகித பயன்பாடு இல்லாத, மின்னணு வழி அலுவலக செயல் முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, பள்ளிக் கல்வி துறையில், மாணவர்கள், ஆசிரியர் விபரங்கள், எமிஸ் என்ற மின்னணு தளத்தில் மேலாண்மை செய்யப்படுகின்றன. நலத் திட்ட உதவிகள், பொதுத் தேர்வுகள், ஆசிரியர் பயிற்சி போன்ற பணிகளும், மின்னணுமயமாகி வருகின்றன.அதேநேரம், பள்ளிகள் துவங்கி, மாவட்ட கல்வி அலுவலகம், மாநில இயக்குனரகங்கள் வரை, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும், காகித கோப்பு முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், புத்தாண்டு முதல் அனைத்து அலுவலகங்களிலும், இ - ஆபீஸ் நடைமுறைகளை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
