படப்பை அரசு பள்ளி இடம் கூட்டுறவு துறைக்கு தாரைவார்ப்பு
படப்பை அரசு பள்ளி இடம் கூட்டுறவு துறைக்கு தாரைவார்ப்பு
UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 10:27 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட, 7 ஏக்கர் நிலத்தில், கால்நடை மருந்தகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.இங்கு, சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கான இடத்தின் பட்டா, முதன்மை கல்வி அலுவலர் பெயரில் உள்ளது. அவ்வாறு, முதன்மை கல்வி அலுவலர் பெயரில் இருக்கும் நிலத்தில், அதே வளாகத்தில் இயங்கி வரும் மணிமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, 31 சென்ட் நிலத்தை, கடந்த ஏப்ரலில் உட்பிரிவு செய்து, வருவாய் துறை பட்டா வழங்கியுள்ளது.இதற்கான தடையில்லா சான்றை, கடந்த ஏப்ரலில் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வழங்கியதால், முன்னாள் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் பட்டா பெற்றதால், பள்ளியின் வளாகத்தில் சாலை அமைக்க திட்டமிட்டு, பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்கும் பணிகள் இரு நாட்கள் முன் நடந்தது.அனுமதியின்றி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதால், முன்னாள் மாணவர்கள் வாயிலாக அப்பணிகள் நிறுத்தப்பட்டன. மாணவர்களின் நலனுக்கு, பள்ளி இயங்க வழங்கப்பட்ட நிலத்தை, கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பிரிவு செய்து கொடுக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு அதிகாரம் கிடையாது என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.இது குறித்து வருவாய் துறையினர் கூறியதாவது:
பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை பள்ளிக்காகவே பயன்படுத்த முடியும். அந்த இடத்தை பிற துறையினருக்கு வழங்க முதன்மை கல்வி அலுவலருக்கு அதிகாரம் கிடையாது. அவர் தடையில்லா சான்று கொடுத்தது செல்லாது. குறிப்பாக, லாப நோக்கில் செயல்படும் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, பள்ளியின் இடத்தை வழங்க வருவாய் துறையினருக்கே அதிகாரம் கிடையாது.இதுபோன்ற நில உரிமை மாற்றம் சம்பந்தமாக பட்டா வழங்க வேண்டுமானால், நில நிர்வாக கமிஷனர் அலுவலக அனுமதி தேவை. அதுபோன்ற அனுமதியை இந்த விவகாரத்தில் வாங்கியதாக தெரியவில்லை.கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், பட்டா கொடுத்த உத்தரவு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படும்.இவ்வாறு கூறினார்.
