பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய அவகாசம்
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய அவகாசம்
UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 06:03 PM
சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்ய ஜன., 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அரசுத் தேர்வர்கள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய கடந்த நவம்பர் மாதம் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது டிச.,28 முதல் ஜன., 5ம் தேதி வரை மீண்டும் பதிவு செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வர்கள் இதற்கான விண்ணப்படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.125 பதிவுக் கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் செலுத்த வேண்டும். முதன்முறையாக 10ம் வகுப்பு தேர்வெழுதவுள்ள/ ஏற்கனவே பொதுத் தேர்வெழுதி செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள், டிச., 27 முதல் ஜன., 12ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஒப்புகை சீட்டை சமர்ப்பித்து பொதுத் தேர்வுக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

