UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 11:16 AM
கோவை:
கோவையில் செயல்படும் தேன்கூடு தன்னார்வ அமைப்பு சார்பில், அறநெறி காப்போம் என்ற தலைப்பில், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் எல்லை கருப்பராயன் கோவில் வளாகத்தில், திருக்குறள் போற்றும் பெண்ணியம் என்ற ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசியதாவது:
அந்த காலத்தில் வாழ்ந்த பெண்கள், தங்கள் முயற்சியால் கல்வி, செல்வம் பெற்றார்கள். இதனால் தன்னை நாடி வந்தவர்களுக்கு செல்வமும், விருந்தும் அளித்து மகிழ்ந்தார்கள். 1200 ஆண்டுகளுக்கு முன்பு, எழுதப்பட்ட பாடலில் இக்கருத்து உள்ளது.சங்க காலத்தில், 477 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அதில், 30 புலவர்கள் பெண்கள். உலகத்தின் எந்த மொழியிலும், இதுபோல அதிக பெண்கள் புலவர்களாக, இருந்ததாக சரித்திரம் இல்லை. இந்த மண், பெண்மையை போற்றும் மண், அவர்களின் கலாசாரத்தை மதிக்கும் மண்.வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும், வாழ்க்கையில் இணைந்த ஒரு ஆணும், பெண்ணும் அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதையும், திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.குடும்பத்தில், பெண்களின் பங்கு என்பது குறித்து திருவள்ளுவர் விளக்குகிறார். அதில், தன்னையும் காத்து, தன்னைச் சார்ந்தவர்களையும் காத்து, அதனால் இந்த சமுதாயத்தையும் காப்பவள்தான் பெண் என்பதை விளக்குகிறார்.நம் வாழ்க்கை சிறப்புற அமைய, நம் வாரிசுகள் சிறந்து விளங்க, இந்த சமுதாயம் நாளை ஆரோக்கியமிக்க சமுதாயமாக வளர வேண்டும் என்றால், தினமும் ஒரு திருக்குறளையாவது பொருளுடன் படித்தால் நம் வாழ்க்கையும், மன நலமும் சிறந்து விளங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

