UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 11:18 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் மேம்பாட்டு இயக்குனரகம் சார்பில், ஐடியாத்தான் சவால் எனும் போட்டி நடத்தப்பட்டது.முதல்கட்ட தேர்வு, ஜூலை 24,25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதன் இறுதி போட்டி, கோவை வேளாண் பல்கலையில் உள்ள, வணிக மேம்பாட்டு இயக்குனரகத்தில் கடந்த, 27ம் தேதி நடந்தது. இறுதிச்சுற்றில் தேர்வான, 15 குழுக்கள் பங்கேற்று தனது தொழில், புதிய கண்டுபிடிப்பு சார்ந்த ஐடியாக்கள் குறித்து விளக்கமளித்தனர்.முதல் பரிசை, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மாணவர்களாகிய கவுசல்யா, கபினேஷ் ஆகியோரும், இரண்டாம் பரிசை திருச்சி வேளாண் கல்லுாரி மாணவர்கள் யமுனா மற்றும் செல்வகுமார், மூன்றாம் பரிசை வனக்கல்லுாரி மாணவன் யாசிக் ஆகியோர் வெற்றிபெற்றனர்.இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 10 குழுக்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பல்கலை தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை மாணவர்கள் பயன்படுத்தி, தனது ஐடியாக்களுக்கான முன்மாதிரிகளை உருவாக்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வெற்றி பெற்றவர்களுக்கு, காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். பரிசளிப்பு நிகழ்வில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரக இயக்குனர் சோமசுந்தரம், சி.இ.ஓ., ஞானசம்பந்தம், கே.வி.கே. அக்ரோ பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

