எதிர்காலம் அறிவியலை நோக்கி உள்ளது: வீரமுத்துவேல் பேச்சு
எதிர்காலம் அறிவியலை நோக்கி உள்ளது: வீரமுத்துவேல் பேச்சு
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 04:55 PM
விழுப்புரம்:
ஒழுக்கத்தை கடைபிடித்ததால் தான் சந்திரயான் 3 திட்டத்தில் சாதிக்க முடிந்தது என திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேசினார்.விழுப்புரம் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அப்பள்ளியில் படித்த சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கவுரவிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து வீரமுத்துவேல் பேசியதாவது:
சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் விழுப்புரம் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியைத் தருகிறது. நடுத்தரமாக படிக்கும் மாணவனாக இருந்து படிப்பை விட ஒழுக்கத்தை கடைபிடித்து தற்போது வரை பின்பற்றி வருகிறேன்.இஸ்ரோவில் படிப்பு அறிவிலும், அறிவியலிலும் கைதேர்ந்தோர் பலர் உள்ளனர். இதில் எனக்கு சந்திரயான் 3 திட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருந்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எனக்கு கொடுத்த வேலையின் மீது நேர்மையோடு செயல்பட்டதாலும், அர்பணிப்பு, ஒழுக்கத்தை கடைபிடித்ததால் தான் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது.ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிலவின் தென் துருவத்தில் செயற்கை கோளை இறக்கும் நிகழ்வில் தோல்வியை சந்தித்தாலும் இந்தியா அதில் வென்றதற்கு காரணம் திட்டமிட்டதை எவ்வித மாற்றமின்றி சரியாக செய்ததால் தான் வெற்றி காண முடிந்தது.மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலம் அறிவியலை நோக்கி இருப்பதால், மாணவர்கள் அதை நோக்கி தங்களின் கல்வி அறிவை புகுத்த வேண்டும்.இவ்வாறு வீரமுத்துவேல் பேசினார்.

