நேர்மையான துணை வேந்தரை இழிவுபடுத்தும் தமிழக போலீஸ்!
நேர்மையான துணை வேந்தரை இழிவுபடுத்தும் தமிழக போலீஸ்!
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 08:03 PM
சேலம்:
சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் ஜெகந்நாதனை, தமிழக போலீசார், எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அது நேர்மையாக செயல்படும் துணை வேந்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, தங்களுடைய செயல்பாடுகளை தகுதியுடன் செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தும் என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி கூறினார்.அவர் அளித்த பேட்டி:
பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்தபோது, பெரியார் பல்கலைக்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர் ஜெகந்நாதன். அவருக்கு தகுதியும் நேர்மையும் இருக்கிறது என்பதாலேயே பலகட்ட வடிகட்டலுக்கு பின், அவரை துணைவேந்தராக நியமித்தனர். அப்படிப்பட்டவர் தனியார் நிறுவனம் துவங்கி, அதில் இயக்குனராக இருந்து நிதி மோசடி செய்தார் என்பதெல்லாம் அபத்தமான குற்றச்சாட்டு.முதலில், பூட்டர் பவுண்டேஷன் என்பது என்ன என்கிற புரிதல் இல்லாமலேயே தவறு நடந்திருப்பதாக சொல்கின்றனர். ஒவ்வொரு பல்கலையும், கல்லுாரிகளும் மாணவர்களை சிறப்புத் தகுதிபடுத்தவும், தொழில் முனைவோர்களாக உருவாக்கவும், தேவையான தொழில்நுட்பங்களை கற்றுத் தருவதற்கான ஏற்பாடாக, பூட்டர் பவுண்டேஷனை அமைத்துக் கொள்ளலாம் என, மத்திய கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.அப்படியொரு பவுண்டேஷனைத் தான் பெரியார் பல்கலையிலும் அமைத்து, அதற்கான பணிகளைத் துவக்கி உள்ளனர். எனக்குத் தெரிந்து, அந்த பவுண்டேஷன் வாயிலாக பணப் பரிவர்த்தனைகளே நடக்கவில்லை. அந்த பவுண்டேஷனுக்கு, துணை வேந்தரும் ஒரு இயக்குனராக இருந்து, அதை நடத்த வேண்டும் என்பது விதி. அப்படி இருக்கும்போது, தற்போது துணை வேந்தராக இருக்கும் ஜெகந்நாதன், ஒரு இயக்குனர் அவ்வளவுதான்.ஜெகந்நாதன் ஓய்வு பெற்று விட்டால், அவருக்கு அடுத்து வருபவர் இயக்குனராவார். இந்தப் பொறுப்புக்கு எந்த சன்மானமும் கிடையாது. இதுகுறித்த எந்த புரிதலும் இல்லாமல், போலீஸ் ஏதோ ஒரு திட்டமிடலோடு வழக்குப் பதிவு செய்து, ஜெகந்நாதனை கைது செய்து, சிறையில் அடைக்க முயன்றுள்ளது.அதுமட்டுமல்ல, தவறு செய்திருக்கிறார் என புகார் சொன்னவர், பல்கலையின் தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன். கூடவே, இந்த நிதி இழப்பு விவகாரம் தொடர்பாக, ஜெகந்நாதனை சந்தித்து கேட்க சென்றபோது, அவர் ஜாதியைச் சொல்லி திட்டியதாகவும், போலீசில் புகார் அளித்திருக்கிறார். இளங்கோவன் புகாரை ஏற்க மறுத்திருக்கிறார், மாஜிஸ்திரேட்.இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்ற முடிவுக்கு வந்த மாஜிஸ்திரேட், ஜெகந்நாதனை சிறைக்கு அனுப்பாமல், ஜாமின் கொடுத்து வெளியே அனுப்பி இருக்கிறார். போலீஸ் விசாரணைக்கு, உயர் கல்வித் துறை அனுமதி கொடுத்திருக்கிறதா என தெரியவில்லை. நேர்மையான ஒரு துணை வேந்தர் மீது இப்படி குற்றச்சாட்டு சுமத்தி, அவரை பழிவாங்குவதை பார்த்து, மற்ற துணை வேந்தர்களுக்கு அச்சமும், சலிப்பும் ஏற்பட்டிருக்கிறது.எனவே, முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உண்மையை அறிந்து அதன் வழியில் போலீசை செயல்பட அறிவுறுத்த வேண்டும். இல்லையேல், நேர்மையாளர்கள் கல்விப் பணிக்கு வர அச்சப்படுவர். இவ்வாறு கனகசபாபதி கூறினார்.மூன்றாம் நாளாக நடந்த சோதனை!
சேலம் பெரியார் பல்கலையில், 3ம் நாளாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேலுவின் &'லாக்கர்&' திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில், 93 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல்கலையில் உள்ள, பூட்டர் பவுண்டேஷன் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. பல்கலை பதிவாளர் அலுவலகம், பதிவாளர் வீடு, இணை பேராசிரியர் சதீஷின் அலுவலக அறை ஆகியவற்றிலும் போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

