பதவிக்கு ஏற்ப திறனறிவு பயிற்சி; தமிழக போலீசில் கோரிக்கை
பதவிக்கு ஏற்ப திறனறிவு பயிற்சி; தமிழக போலீசில் கோரிக்கை
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 08:05 PM
சென்னை:
போலீசாரின் பதவிக்கு ஏற்ப ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் திறனறிவு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.காவல் துறையில் 10 சதவீத போலீசார் தான் தாங்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப திறனறிவு பெற்றவர்களாக உள்ளனர். மற்றவர்களுக்கு சட்டம் பற்றிய அறிவு காவல் துறை நிர்வாக நடைமுறை நீதிமன்ற உத்தரவுகள் அணிவகுப்பு பயிற்சி அளிக்கும் முறை எனஎதுவும் தெரியாமல் உள்ளனர். திறனறிவு பெற்றவர்கள் வேலையை எளிதில் செய்து முடித்து விடுகின்றனர்; மற்றவர்கள் திணறுகின்றனர். ஆனால் இரு தரப்பினருக்கும் சமமான ஊதியம் பதவி உயர்வு பணப்பலன்என எல்லா சலுகையும் கிடைக்கின்றன.திறனறிவு பெற்றவர்களுக்கு வேலைப்பளு அதிகம். எனினும் இவர்கள் மீது தான் குற்றச்சாட்டுகளும் அதிகம் குவிகின்றன. திறனறிவு அற்றவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை. அதிகாரிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்தே தங்கள் பணியை தக்கவைத்துக் கொள்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும். போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு வகித்து வரும் பதவிக்கு ஏற்ப திறனறிவு பயிற்சி அளிக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அவர்கள் கூறியதாவது:
போலீசாருக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு முன் சட்டம் பற்றிய அறிவு கைதிகளை கையாளும் நடைமுறை காவல் துறை நிர்வாகம் என அனைத்து தரப்பு பயிற்சிகளும் அளிக்க வேண்டும். அவற்றை நுாறு சதவீதம் பணியில் கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.பயிற்சியில் அவர்கள் கற்ற பாடங்கள் குறித்து எழுத்து மற்றும் நேர்முக தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைகிறது. குற்றவாளி அதற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்கிறான்.ஆனால் காவல் துறையில் குற்றவாளிகளை விசாரிக்கும் முறை உட்பட அனைத்திலும் பழைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இதில் மாற்றம் வேண்டும். திறமை வாய்ந்த காவல் துறையை உருவாக்க திறனறிவு பயிற்சி அவசியம். அதை ஐ.பி.எஸ். அதிகாரிகள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

