ஆசிரியர்களுக்கு சம்பள பாக்கி அதிரடி காட்டிய பெண் அமைச்சர்
ஆசிரியர்களுக்கு சம்பள பாக்கி அதிரடி காட்டிய பெண் அமைச்சர்
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 08:14 PM
அமேதி:
உத்தர பிரதேசத்தில், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், தங்களுக்கான சம்பள நிலுவை தொகையை தராமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார் கொடுத்த நிலையில், அவற்றை உடனே வழங்கும்படி மாவட்ட கல்வி அதிகாரிக்கு மத்திய அமைச்சரும், அமேதி எம்.பி.,யுமான ஸ்மிருதி இரானி உத்தர விட்டார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமேதி லோக்சபா தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, மூன்று நாட்களாக தன் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.நேற்று முன்தினம் அவரிடம், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்களுக்கான சம்பள பாக்கி வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதைஅடுத்து, உடனே மாவட்ட கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை தொகையை விரைவாக விடுவிக்கும்படி உத்தரவிட்டார்.மாவட்ட கல்வி அதிகாரியிடம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், அவர், கோரிக்கை விடுக்கும் மக்களிடம், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்; இது அமேதி.இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை எளிதில் அணுகலாம். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு உடனே நிலுவை சம்பளம் கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறது. எனவே, விரைவாக நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

